
லண்டனில் காமன்வெல்த் மாநாடு தொடங்கியது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று லண்டன் போய்ச் சேருகிறார்.
இந்தியா உள்ளிட்ட 53 நாடுகள், காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. தொடர்ந்து 2 ஆண்டுகளாக, இதன் தலைவர் பொறுப்பில், இங்கிலாந்து இருந்து வருகிறது.
இந்த ஆண்டு, காமன்வெல்த் மாநாட்டை இங்கிலாந்து நடத்துகிறது. ‘பொது எதிர்காலத்தை நோக்கி’ என்ற தலைப்பிலான இந்த மாநாடு, லண்டனில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆண்டு, காமன்வெல்த் நாடுகளிடையிலான வர்த்தகம் 70 ஆயிரம் கோடி டாலராக இருக்கும் என்று காமன்வெல்த் வர்த்தக ஆய்வுக்குழு கணித்துள்ளது. இருந்தாலும், இதில் அபாய காரணிகள் உள்ளன. இதை நாம் இணைந்து முறியடிக்க வேண்டும்” என்றார்.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, இந்திய தொழிற்கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தலைவர் பிரகாஷ் பார்தி மிட்டல் தலைமையில் 40 தொழில் அதிபர்கள் லண்டனுக்கு சென்றுள்ளனர். தொழில்நுட்பம், வேளாண்மை, உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் காமன்வெல்த் நாடுகள் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை அவர்கள் ஆராய்வார்கள்.
இந்த மாநாட்டின் முக்கிய அங்கமாக, ‘காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம்’ நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
அவர் இன்று லண்டன் போய்ச் சேர்ந்து, இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
No comments:
Post a Comment