திருக்குறள்:

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

WEBSITE UPDATE IS GOING ON SOME FUNCTIONS IS NOT WORKING SORRY FOR INCONVENIENCE

தமிழன்... டா !

MOBILE & DTH RECHARGE, TAMIL FM ENABLED

title

Monday, April 16, 2018

பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்

பிரதமர் மோடி இன்று வெளிநாடு பயணம்
சுவீடன், இங்கிலாந்து, ஜெர்மனி நாடுகளில் சுற்றுப்பயணம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

புதுடெல்லி, 

சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ‘நார்டிக்’ நாடுகள் என அழைக்கப்படும் டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் இந்தியா பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

சுவீடன் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், நார்டிக் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்கின்றனர்.

இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாடு ‘பொதுவான எதிர்காலத்தை நோக்கி’ என்னும் தலைப்பில் வருகிற 18-ந் தேதி முதல் 20-ந் தேதி முடிய நடக்கிறது. இதில் பிரதமர் மோடி உள்பட 53 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த 2 மாநாடுகளிலும் பங்கேற்பதற்காக மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சுவீடன் செல்கிறார். இன்று இரவு அவர் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைகிறார். பிரதமருடன் இந்திய உயர்மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்றும் செல்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) மோடி, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வெனை சந்தித்து இரு நாடுகளின் உறவு குறித்து ஆலோசனை நடத்துகிறார். அப்போது இருதரப்பிலும் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சுவீடன் மன்னர் கார்ல் கஸ்டாப்பையும் மோடி சந்தித்து பேசுகிறார்.

மேலும் சுவீடன் நாட்டு தொழில் அதிபர்களுடன் மோடியும், லோப்வெனும் வட்டமேஜை முறையில் கலந்துரையாடுகின்றனர். அப்போது இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு சுவீடன் தொழில் அதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுப்பார்.

இதைத்தொடர்ந்து சுவீடனில் வசிக்கும் 20 ஆயிரம் இந்திய சமூகத்தினருடன் அவர் கலந்துரையாடுகிறார்.

சுவீடன் பயணத்தை முடித்துக்கொண்டு விட்டு நாளை இரவு மோடி அங்கிருந்து லண்டனுக்கு பயணமாகிறார். இங்கிலாந்தில் மட்டும் அவர் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

வருகிற 18-ந் தேதி காலை இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயை சந்திக்கிறார். பிரிவினைவாதம், எல்லைதாண்டிய பயங்கரவாதம், விசா மற்றும் குடியேற்றம் தொடர்பாக அவர்கள் விவாதிக்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதையடுத்து, லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்துக்கு சென்று அங்கு நடைபெறும் அறிவியல் கண்காட்சியை மோடி பார்வையிடுகிறார். லண்டனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். லண்டன் தேம்ஸ் நதிக்கரையோரம் நிறுவப்பட்டு உள்ள 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய தத்துவஞானி மற்றும் சமூக சீர்திருத்தவாதி பசவேஸ்வரா சிலைக்கு மரியாதை செய்கிறார்.

அன்று மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தையும் மோடி சந்தித்து பேசுகிறார். காமன்வெல்த் தலைவர்களில், 91 வயது ராணி எலிசபெத் தனிப்பட்ட முறையில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ள மூன்று பிரதமர்களில் மோடியும் ஒருவர் ஆவார்.

19 மற்றும் 20-ந் தேதியும் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாட்டின் முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் வர்த்தகம், மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாட்டில் 5 ஆயிரம் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

19-ந் தேதி மாலை பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி எலிசபெத் சார்பில் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.

20-ந் தேதி மாநாடு வின்சர் காஸ்டில் அரண்மனையில் நடக்கிறது. இதன் முக்கிய நிகழ்வாக காமன்வெல்த் தலைவர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது உதவியாளர்கள், ஆலோசகர்கள் துணையும் இல்லாமல், எதையும் திட்டமிடாமல் தலைவர்கள் பேசிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் நாடுகளுக் கான தலைவர் பொறுப்பை வகிக்கும் ராணி எலிசபெத் வயது மூப்பின் காரணமாக மற்ற காமன்வெல்த் நாடுகள் நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இந்த மாநாட்டில் இளவரசர் சார்லசை தலைமை பொறுப்புக்கு நியமிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு 20-ந் தேதி மோடி ஜெர்மனி நாட்டுக்கு செல்கிறார். அங்கு 4-வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஏஞ்சலா மெர்கலை அவர் சந்தித்து பேசுகிறார்.

பின்னர் மோடி 21-ந் தேதி நாடு திரும்புகிறார்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டில் கடைசியாக 2009-ம் ஆண்டு மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது. அதன்பிறகு ஆஸ்திரேலியா, இலங்கை, மால்டா ஆகிய நாடுகளில் நடந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் காமன்வெல்த் நாடுகளின் தலைவரும், இங்கிலாந்து ராணியுமான எலிசபெத் பிரதமர் மோடிக்கு தனிப்பட்டமுறையில் ஒரு கடிதம் எழுதினார். அதில், லண்டன் மாநாட்டில் பங்கேற்கவேண்டும் என்று அவர் மோடியை கேட்டுக்கொண்டிருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி லண்டனில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment